சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு… 1,190 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்..!

சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, 1,190 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

‘சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 14ம் தேதி 470 பேருந்துகளும், ஆகஸ்ட் 16ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 17ம் தேதி 365 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 14ம் தேதி 70 பேருந்துகளும், ஆகஸ்ட் 16ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 17ம் தேதி 65 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. மற்றும் பெங்களூர், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 20 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 1190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் , ஆகஸ்ட் 18ம் தேதி சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.