இருகூர் வக்கீல் மகளைக் கடத்த முயன்ற 2 பேர் கைது..!

கோவை அருகே உள்ள இருகூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 41) வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கோவை ரயில் நிலையம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு தனது மனைவி, மகளுடன் சாப்பிட சென்றார். சாப்பிட்டு விட்டு ஓட்டலுக்கு வெளியே பிரவீன் குமார் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவியும், மகளும் பாத்ரூம் சென்றனர். அந்த நேரத்தில் அங்கு வந்த 2 ஆசாமிகள் பிரவீன் குமார் மகளை கடத்த முயன்றனர். இதை பார்த்த அவரது மனைவி சத்தம் போட்டார். பிரவீன் குமார் ஓடி வந்து பொதுமக்கள் உதவியுடன் அந்த இருவரையும் கையும் களவுமாக பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் அவர்கள் 2 பேரை கைது செய்தார். விசாரணையில்  அவர்கள் கோவை புதூர் குளத்துப்பாளையம் அம்மாவாசை கவுண்டர் வீதியைச் சேர்ந்த மணிவண்ணன் ( வயது 30 ) பத்மநாபன் (வயது 30) என்பது தெரிய வந்தது. இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது..