மீன் பிடிக்கும் போது குட்டையில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் பரிதாப பலி..

கோவை கரும்புக்கடை, ஞானியார் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பாரிஸ் அகமது ( வயது 24 ) டிரைவர். இவரது மனைவி ஷர்மிளா (வயது 21) இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பாரிஸ் அகமதுவின் சகோதரி மகன் ஹாயான் அகமது( வயது 8) தனியார் பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் பாரிஸ் அகமது நேற்று முன்தினம் காலையில் ஹாயான் அகமதுவை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு குளத்தில் மீன்பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு 7 மணி ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பாரிஷ் அகமதுவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது அது ” சுவிட்ச் ஆப்’ என்று தெரிய வந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் உடனே குறிச்சிகுளம், உக்கடம் குளம்,பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருவரையும் தேடினர் .அப்போது குளத்துப்பாளையம் ஜெ .ஜெ. நகர் பகுதியில் உள்ள ஒரு குட்டையின் கரையோரத்தில் பாரிஷ் அகமதுவின் இருசக்கர வாகனம் இருப்பது தெரிய வந்தது . இதையடுத்து குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் நீர் நிரம்பி காணப்பட்ட அந்த குட்டையில் இருவரையும் தேடினர் .நேற்று பாரிஸ் அகமது மற்றும் சிறுவன் ஹாயான் அகமது ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். இவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் குட்டையில் மீன் பிடித்த போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.