கோவையில் 20 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் – கும்பல் தலைவன் கைது..!

கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வந்தது .இதற்கு ஒரு சில மாணவர்களும் உடந்தையாக இருந்தனர் .இந்த கும்பலை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்த இலாஹி ( வயது 26 )மரிய ( வயது 31 )மஞ்சுப் ரகுமான் (வயது 27) கிருஷ்ணன் என்ற பூச்சி கிருஷ்ணன் ( வயது 24 )சென்னை சினேகா ஸ்ரீ (வயது 31) உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் மரியா என்பவர் சினிமா துணை நடிகையாகவும், யாசிக் இலாகி துணை நடிகராகவும் உள்ளனர் .இந்த கும்பலிடம் மதுவிலக்கு போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் அரியானா மற்றும் இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து போதை மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி இங்குள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் இவர்களிடம் போலீசார் பல்வேறு கட்ட விசாரணை நடத்தினர் . இதில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் கர்க் (வயது40) என்பவர் கோவை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள போதை மருந்து கும்பல்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. இவர் போதை மாத்திரை விற்பனை கும்பல் தலைவனாகவும் இருந்து உள்ளார். இதனை தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில் மதுவிலக்கு அமல்பிரிவுபோலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படையினர் இவரை கைது செய்தனர்.

இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மட்டும் இன்றி தமிழ்நாடு முழுவதும் ஒரு கும்பல் போதை மாத்திரைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.  அந்த தனிப்படையினர் அரியான மாநிலம் சென்று போதை மாத்திரைகளை பல்வேறு கும்பல்களுக்கு மொத்தமாக விற்பனை செய்து வந்த சச்சின் கர்க் என்பவரை கைது செய்தது. அவரிடம் இருந்து 20 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் மீது கோவை மாநகரில் ஏற்கனவே 3 வழக்குகள் உள்ளன. போதை மாத்திரைகளை விற்பனை செய்ய சச்சின் போலி ஜி .எஸ் . டி பில் தயார் செய்து உள்ளார். .அது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்..