பேஷன் ஷோ ஆசை காட்டி… பார்லர் நடத்தி வரும் 200 பெண்களிடம் பணம் பறிப்பு – இருகூர் வாலிபர் கைது.!!

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் 26 வயது பெண் .இவருக்கு சமூக வலைதளம் மூலம் இருகூரைச் சேர்ந்த கவுதம் (வயது 29) என்பவர் அறிமுகமானார். அப்போது அவரிடம் கவுதம் தான் பேஷன் ஷோ நடத்தி வருவதாகவும், இதற்கு அழகான பெண்கள், அழகு கலை நிபுணர்கள் தேவை என்று கூறியுள்ளார். இதனை நம்பி அந்தப் பெண் தான் பேஷன் ஷோவில் பங்கேற்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கவுதம் அவரிடம் பல்வேறு தவணைகளாக பணம் பெற்று ஏமாற்றியதாக தெரிகிறது .இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த வாரம் கவுதமை கைது செய்தனர். தொடர்ந்து கவுதமிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன் விவரம் வருமாறு:- கவுதம் அழகு நிலையம் நடத்தி வரும் பெண்களின் செல்போன் எண் விவரங்களை அறிந்து கொண்டு அவர்களிடம் பேசுவார். அப்போது புதிதாக அறிமுகமான சேலை மற்றும் பல்வேறு பொருட்களுக்கு விளம்பர சூட்டிங் மற்றும் பேஷன் ஷோ நடத்துவதாகவும் இதன் மூலம் மாதம் ரூ 50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று ஆசை வாரத்தை கூறுவார். வாலிபரின் இந்த பேச்சில் மயங்கும் பெண்களிடம் முன்பணமாக ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பெற்றுக் கொள்வார். பின்னர் அவர்களிடம் பேஷன் ஷோ நடைபெறும் போது கூறுவதாக சொல்வார். இதேபோல அவர் பீளமேடு, சிங்காநல்லூர், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் 200 பெண்களிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. இதனால் அவரை போலீசார் காவல் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இவரால் ஏமாந்த பெண்கள் புகார் கொடுக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் ஆன்லைன் மோசடி கும்பலின் ஆசை வர்த்தக நம்பி பணத்தை இழந்து ஏமாற வேண்டாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.