கோவை பஸ்களில் கொள்ளையடித்த 3 தம்பதிகள் கைது..!

கோவையில் டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது .குறிப்பாக வயதான பெண்கள் முதியோர்களை குறிவைத்து இந்த சம்பவம் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில் வெரைட்டி ஹால் ரோடு இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, ஏட்டுக்கள் கார்த்தி, பூபதி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் நகை திருடும் கும்பலை தீவிரமாக தேடி வந்தனர் .இந்த தனிப்படையினர் பொதுமக்களை போன்று சாதரரண உடை அணிந்து அதிக கூட்டம் கூடும் டவுன்ஹால்,பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது டவுன்ஹால் பகுதி பஸ் ஸ்டாப்பில் சந்தேகத்திற்குமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு தம்பதி மீது தனிப்படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த தம்பதியரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் அவர்கள் பாப்பம்பட்டியில் வசித்து வரும் முத்தப்பன் அவரது மனைவி சாந்தி என்பது தெரிய வந்தது. இவர்கள் பஸ்சில் கூட்டம் நெரிசலை பயன்படுத்தி கொள்ளையடித்து வந்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் திருப்பூர் தாராபுரம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் அவரது மனைவி சுமதி மற்றும் பாப்பம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன்,அவரது மனைவி காளீஸ்வரி ஆகிய தம்பதிகளும் கோவையில் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடியது தெரியவந்தது இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் , 10 பவுன் நகைகள் ரூ.15 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கும்பலின் தலைவனாக முத்தப்பன் செயல்பட்டு வந்துள்ளார். இந்த தம்பதிகள் கொள்ளையடித்த பணத்தில் வீடுகள், நிலங்கள் வாங்கி சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர் .கோவை பஸ்களில் திருட்டு நடத்தி வந்த 3 தம்பதியை கைது செய்து நகை -பணத்தை மீட்ட சப் இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா,உள்ளிட்ட தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார். இந்த கொள்ளை கும்பல் கோவை மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.