300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்காட்டுப் பள்ளி பூண்டி மாதா பேராலயம் தேர்பவனி திருவிழா..!

300 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்காட்டுப் பள்ளி பூண்டிமாதா பேராலயம் அன்னை பிறப்பு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார தேர்பவனி திருவிழா வான வேடிக்கையுடன் கோலாகலமாக நடைப்பெற்றது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட துண்டின் ஒரு பாகம் பக்தர்கள் வழிப்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்புமிக்க இந்த பேராலயத்தில் அன்னை பிறப்பு பெருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள் தோறும் சிறப்பு திருப்பலிகள் நடைப்பெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர்பவனி திருவிழா நடைப்பெற்றது. ஆலயம் முன்ப மாதா சொருபம் வைக்கப்பட்ட மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரினை குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி புனிதம் செய்து துவக்கி வைத்தார். பேண்ட் வாத்யங்கள் இசையுடன், வானவேடிக்கை முழங்க, திருத்தேர் புறப்பட்டபோது கூடியிருந்த பக்தர்கள் மரியே வாழ்க என பக்தி முழக்கமிட்டனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டு சென்றனர்..