‘புஷ்பா’ பட பாணியில்… சரக்கு வாகனத்தில் ரகசிய இடம் அமைத்துக் 400 கிலோ குட்கா கடத்தல்..!

புஷ்பா’ திரைப்படம் பாணியில் சரக்கு வாகனத்தில் ரகசிய இடம் அமைத்து, குட்கா கடத்தி வந்தவர்களை விருதுநகர் மாவட்ட போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

இது குறித்து, போலீஸாரிடம் விசாரிக்கையில், “விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த அழகாபுரியில் காவல்துறையின் சோதனைச்சாவடி இருக்கிறது. இந்த வழியே தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. இந்த நிலையில், போலீஸுக்கு வரும் ரகசியத் தகவலின் அடிப்படையில் சந்தேக வாகனங்களைத் தடுத்து நிறுத்தி சோதனை நடத்துவது வழக்கம்.

அதன்படி, மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் 07-07-2023 அன்று அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், அந்த வழியே சந்தேகப்படும்படி வந்த சரக்கு வாகனத்தை தடுத்துநிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் சரக்குகள் ஏதும் இல்லாதநிலையில், வெளிமாவட்ட பதிவெண்கொண்ட வாகனம் வெற்று வாகனமாக ஆதாயமின்றி வெகுதூரம் பயணித்து வந்தது போலீஸுக்குச் சந்தேகத்தை வரவழைத்தது.

இதனால் சரக்கு வாகன ஓட்டுநர் கண்ணனிடம், போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது, ஓட்டுநர் கண்ணனின் செல்போனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. போன் ஸ்பீக்கரில் போடப்பட்டது. அந்த அழைப்பில் பேசிய நபர் ஏம்ப்பா!! சரக்கு ஏத்திட்டு எப்ப வருவ என கேட்டார்..

இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் கண்ணனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், குற்றால சீசனையொட்டி சுற்றுலாப்பயணிகளைக் குறிவைத்து பான்மசால் விற்பனை செய்வதற்காக குட்கா கடத்தி வந்ததாக கண்ணன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர், அடையாளம் காட்டியபடி மீண்டும் சரக்கு வாகனத்தை போலீஸார் சோதனை செய்ததில், `புஷ்பா திரைப்படம் பாணியில்’ சரக்கு வாகன தொட்டிக்கு கீழே ரகசிய இடம் அமைத்து 400 கிலோ குட்கா பான்மசாலாவைப் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குட்காவையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீஸார், நத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து ஓட்டுநர் கண்ணன் உட்பட இரண்டு பேர்மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார் கண்ணனைக் கைதுசெய்தனர்.