கோவை தெற்கு எம்.எல்.ஏவும்,பாஜகவை சேர்ந்தவருமான வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.
சுத்தமான குடிதண்ணீர் வசதி இல்லாதோர் எண்ணிக்கை 16.4 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. மின்சார வசதி இல்லாதோர் எண்ணிக்கை 44.9 சதவீதத்தில் இருந்து 13.6 சதவீதமாக குறைந்துள்ளது. இந்திய மக்கள் தொகை தற்போது 142.86 கோடி உள்ளது.
அதன்படி, ஊட்டசத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2005ம் ஆண்டு 44.3 சதவீதமாக இருந்த 2021-ல் 11.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. குழந்தை இறப்பு விகிதம் 4.5 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. சமையல் எரிவாயு வசதி இல்லாதோர் எண்ணிக்கை 52.9 சதவீதத்தில் இருந்து 13.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
சுகாதார கட்டமைப்பு வசதிகள் இல்லாதோரின் எண்ணிக்கை 50.4 சதவீதத்தில் இருந்து 11.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இதற்கு பிரதமர் மோடி அவர்களின் 9 ஆண்டு பொற்கால ஆட்சியே காரணம்” என்று தெரிவித்துள்ளார் வானதி சீனிவாசன்.