லஞ்சம் கேட்டவரை பிடிக்க கொடுத்த 500 ரூபாய் நோட்டு … 28 ஆண்டுகளுக்கு பின் உரியவரிடம் ஒப்படைப்பு.!!

கோவை பீளமேடு நவஇந்தியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கதிர் மதியோன் .நுகர்வோர் அமைப்பு சேர்ந்த இவர் 1996 – ஆம் ஆண்டு தனது வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் தொடர்பாக மின்வாரிய அதிகாரியிடம் விண்ணப்பித்தார். அப்போது மின்வாரிய அதிகாரி ஒருவர் ரூ. 500 லஞ்சம் கொடுத்தால் தான் பெயர் மாற்றம் செய்து தருவேன் என்று கூறியுள்ளார். இது குறித்து கதிர் மதியோன் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ரசாயன மை தடவிய 500 ரூபாயை கதிர் மதியோன் மின்வாரிய அதிகாரியிடம் கொடுத்தார் . அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக மின்வாரிய அதிகாரியை பிடித்தனர். அப்போது வழக்கு ஆதாரத்துக்காக அந்த 500 ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் கதிர் மதியோனிடம் பெற்று சென்றனர். கடந்த 28 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தான் அந்த 500 ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் திரும்ப கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து நுகர்வோர் அமைப்பு சேர்ந்த கதிர் மதியோன் கூறியதாவது :-தற்போது 100 ரூபாய் நோட்டுகளாக 5 வீதம் 500 ரூபாய் கொடுத்ததால் செல்லுபடியாகிறது. முழு 500 ரூபாய் என்றால் அது தற்போது செல்லாததாக இருக்கும் . இது போன்ற வழக்குகளில் பலரிடம் வழக்கு விசாரணைக்காக பெறப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதாகி இருக்கிறது. இந்த பிரச்சனையை தீர்க்க நான் ஏற்கனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அதே தொகைக்கு ஈடாக வேறு ரூபாய் நோட்டுக்களை புகார்தாரருக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையிலும் இந்த உத்தரவை லஞ்ச ஒழிப்பு போலீசார் முறையாக பின்பற்றுவது இல்லை. இதனால் லஞ்ச குற்றம் தொடர்பாக பலர் புகார் கொடுக்க தயங்குகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.