கோவை கணபதியை சேர்ந்தவர் நேசமணி. இவர் ஆன்லைன் வர்த்தகம் மூலம் நூல் பண்டல் வியாபாரம் செய்து வருகிறார் .இந்த நிலையில் கோவை வெள்ளலூரை சேர்ந்த புருஷோத்தமன் ( வயது 58) என்பவர் நேசமணியை தொடர்பு கொண்டார். பின்னர் புருஷோத்தமன் தனக்கு நூல் பண்டல் தேவைப்படுவதாக தெரிவித்தார் .இதையடுத்து நேசமணி ரூ.33 லட்சத்து 16ஆயிரம் மதிப்புள்ள நூல் பண்டல்களை அவருக்கு அனுப்பி வைத்தார். நூல் பண்டல்களை பெற்றுக் கொண்ட அவர் அதற்கு உரிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நேசமணி கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் புருஷோத்தமன் அவரின் மகள் கீதாஞ்சலி ( வயது 24) உக்கடம் ரோஸ் கார்டனை சேர்ந்த காஜா உசேன் (வயது 45) போத்தனூர் இந்திரா நகரை சேர்ந்த வீரமுத்து (வயது 58) ஈரோடு பெருமாநல்லூரை சேர்ந்த ஆனந்த் ( வயது 43) திருப்பூர் வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த பாரத் (வயது 39) கோவை சவுரிபாளையம் மோசஸ் மேத்யூ (வயது 31) சேவரைச் சேர்ந்த மருதாச்சலம் (வயது 49 ) ஆகிய 8 பேர் கொண்ட கும்பலை நேற்று கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருப்பூர் கணக்கம்பாளையத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரிடம் ரூ.48 லட்சத்திற்கு நூல் பண்டல் வாங்கி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதும் தெரிய வந்தது .இது குறித்து பிளமேடு போலீசில் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ 81 லட்சத்து 16 ஆயிரத்துக்கு நூல் பண்டல் வாங்கி ஏமாற்றிய கும்பலால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .இந்த கும்பல் மராட்டியம், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் ஆன்லைன் மூலம் மளிகை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து அதற்குரிய பணத்தை கொடுக்காமல் மோசடி செய்ததும் தெரியவந்தது .இந்த கும்பலின் தலைவராக போத்தனூர் சேர்ந்த புருஷோத்தமன் செயல்பட்டுள்ளார். வெளிமாநிலங்களில் கைவரிசை காட்டிய இந்த கும்பலிடம் இருந்து 2 மடிக்கணினிகள் 7 செல்போன்கள் 3 கார்கள் 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை ஈரோடு மட்டும் அல்லாமல் பல மாநிலங்களிலும் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது..