காரில் கடத்தி வந்த ரூ.9 லட்சம் கஞ்சா பறிமுதல் – 2 பேர் கைது..!

கோவை மாவட்ட காவல்துறையினர் சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பொள்ளாச்சி கிழ‌க்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் தனிப்படை காவல்துறையினர் பொள்ளாச்சி மரப்பேட்டை அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக 4 சக்கர வாகனத்தில் கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த பஷீர் மகன் ரஷீத் (24) மற்றும் உமர் மகன் கலீல் ரகுமான் (44) ஆகியோர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள 60 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சாவை கடத்தி வந்த கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் . மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும் மேற்படி கஞ்சா வழக்கில் திறம்பட செயல்பட்டு கஞ்சா வழக்கு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவல்துறையினரை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்..