கோவை ஓட்டல் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்த தனியார் நிறுவன ஊழியர்..

கோவை: திருவள்ளூர் மாவட்டம் கொசவம்பாளையத்தை சேர்ந்தவர் தரணி (வயது 43). தனியார் நிறுவன ஊழியர். இவர் சொந்த வேலை காரணமாக கடந்த 30-ந் தேதி கோவை வந்தார்.

இங்கு காட்டூர் ராம் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். இதையடுத்து ஓட்டல் ஊழியர் ஒருவர் அறையை சுத்தம் செய்வதற்காக சென்றார். அப்போது அவர் கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரமாக கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த ஊழியர் இது குறித்து லாட்ஜ் மேலாளரிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, தரணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தூக்கில் பிணமாக தொங்கி கிடந்த தரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தரணி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஓட்டல் அறையில் தற்கொலை சம்பம் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.