அடுத்தடுத்து 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய கார்: முதியவர் பலி- மாணவர் படுகாயம்..

வடவள்ளி: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் வருண் விஜய் (வயது24).

இவர் கேரளாவில் இருந்து கோவைக்கு காரில் வந்தார். பின்னர் மருதமலை ஐ.ஓ.பி.காலனியில் உள்ள தனது நண்பரான சதீஷ்குமார் வீட்டிற்கு சென்றார். இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று காலை வருண் விஜய் ஐ.ஓ.பி.காலனியில் இருந்து கோவை நோக்கி காரில் வந்தார். பாரதியார் பல்கலைக்கழகம் அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறம் இருந்த தடுப்பில் மோதியது.

மோதிய வேகத்தில் கார் தனது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மீதும், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீதும் அடுத்தடுத்து மோதியது. பின்னர் அந்த பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மோதி கார் நின்றது.

இந்த விபத்தில் காருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த சின்னவேடம்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார்(59) என்பவர் உயிரிழந்தார். பள்ளி மாணவரான சஞ்சய்(18) காயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காயம் அடைந்த மாணவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடவள்ளி போலீசார் இறந்த சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.