கோவை அருகே காட்டு யானை தாக்கி வாலிபர் பரிதாப பலி..

கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே உள்ள செம்மேட்டில் வனத்துறை சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் 30 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் நேற்று இறந்து கிடப்பதாக செம்மேடு கிராம நிர்வாக அதிகாரி அம்சவல்லிக்கு தகவல் கிடைத்தது .இதன் பேரில் அவர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அந்த வாலிபர் காட்டு யானை தாக்கியதில் இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர் .இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆலந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தது யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.