பட்டப்பகலில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் வெட்டி படுகொலை.. காரில் வந்த 3 பேர் வெறிச்செயல்..!

செங்கல்பட்டு அருகே வன்னியர் சங்க மாவட்ட தலைவர் காளிதாசன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் நேற்று  செங்கல்பட்டு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் காளிதாஸ் (34) என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெற்ற கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரம் ஜூஸ் கடையில் நின்று கொண்டிருந்த போது காரில் வந்த 3 பேர் காளிதாசை வெட்டிக் கொன்றதாக தெரிகிறது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மறைமலைநகர் பகுதிகளில் உள்ள கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாலை 3 மணி முதல் மறைமலைநகர் பாவேந்தர் சாலை, ஜிஎஸ்டி சாலை, திருவள்ளுவர் சாலைகளில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வன்னியர் சங்க நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் திடீரென கடைகள் அடைக்கப்பட்டதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக மறைமலைநகர் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.