ஒரு உயிர் போச்சே.. காவல்துறை சீர்திருத்த ஆணைய அறிக்கை என்ன ஆனது.? அண்ணாமலை கேள்வி..?

கோவை சரக டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் இன்று காலை 6 மணி அளவில் தனது அலுவலகத்தில் மெய் காப்பாளர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொண்டார்.

அவர் கடந்த இரண்டு வருடங்களாக தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக முதற் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

உயர் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காவல்துறை அதிகாரி விஜயகுமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு நீதியரசர் செல்வம் தலைமையிலான காவல்துறை சீர்திருத்த ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “கோவை சரக டிஐஜி திரு விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு சி.டி. செல்வம் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது?

காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழக காவல்துறையில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் தற்கொலை என்பது அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன என்று, தமிழக அரசு, தீவிர விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பாஜக சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.