போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.60 லட்சம் நிலம் மோசடி – 3 பேர் கைது.!!

கோவை தெப்பக்குளம் வீதியை சேர்ந்த ஒரு ராமகிருஷ்ணன் ( வயது 45) டிரைவர். இவருக்கு சொந்தமாக சின்னவேடம்பட்டியில் ரூ. 60 லட்சம் மதிப்பில் 10 சென்ட் நிலம் உள்ளது . அந்த இடத்திற்கான பவரை ராமகிருஷ்ணன் சின்ன வேடம்பட்டியை சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு கொடுத்து வைத்திருந்தார். அந்த இடத்தை சந்திரசேகர் தனக்குத் தெரிந்த குறிச்சியை சேர்ந்த மற்றொரு ராமகிருஷ்ணன் என்பவரிடம் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். இதைத் தொடர்ந்து சந்திரசேகர் அந்த இடத்தை தனது உறவினர்களான கரூரை சேர்ந்த அண்ணாமலை ( 55) கோவை ராம் நகரை சேர்ந்த துரைராஜ் ( 54 ) தங்கவேல் ஆகியோருடைய பெயருக்கு காந்திபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் மாற்றினார். இதற்கிடையில் ராமகிருஷ்ணன் அந்த இடத்தை தனது தாயாரின் பெயருக்கு மாற்ற பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அவரது இடம் மற்றவர்களின் பெயரில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராமகிருஷ்ணன் சந்திரசேகரனிடம் கேட்டார். ஆனால் அவர் சரியான பதில் சொல்லவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமகிருஷ்ணன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் .அதன் பெயரில் போலீசார் சந்திரசேகர், அண்ணாமலை, துரைராஜ் ஆகிய 3 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள தங்கவேல், ராமகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.