தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது

கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் சூர்ய பிரசாத். இவர் இந்து முன்னணி அமைப்பின் செல்வபுரம் நகரத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 30 ஆம் தேதி செல்வபுரம் வடக்கு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த அசாருதீன் என்பவர் தன்னை செல்போனில் படம் எடுத்ததாகக் கூறி அவரை மிரட்டி செல்போனை பறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதை அடுத்து போலீசார் அசாருதீனிடம் விசாரணை நடத்தி செல்போனை ஆய்வு செய்த போது செல்போனில் படம் ஏதும் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.மேலும் விசாரணையில் தனி காவலர் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக அசாருதீனை மிரட்டி செல்போனை பறித்து நாடகமாடி பொய் புகார் அளித்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தன் மீது பொய்யான புகார் அளித்து இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் விதமாக செயல்பட்டதாக அசாருதீன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்து முன்னணி பிரமுகர் சூர்ய பிரசாத் மீது வழக்குப் பதிவு செய்த செல்வபுரம் காவல் நிலைய போலீசார் சூர்ய பிரசாத்தை கைது செய்தனர்.