அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி- கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது.!!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன் . இவரது மகன் நாகராஜ். இவர் பெயிண்ட் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த கரூரை சேர்ந்த சாய் ஸ்ரீ (வயது 24)அவரது கணவர் கிருஷ்ணகுமார் (வயது 34) மற்றும் அவரது மாமா பெருமாள்சாமி (வயது 69) ஆகியோர் அவரைப் பற்றி விசாரித்து அவரது மகன் வேலையில்லாமல் இருப்பதை அறிந்து நாகராஜிடம் , அவரது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும் அரசு வேலையில் சேருவதற்கு அதிகாரிகளிடம் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.அதனை நம்பி நாகராஜ் அவர்களிடம் ரூ 1 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர் மகனுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியது தெரிய வந்தது. இதுகுறித்து நாகராஜ் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைத்து மோசடி செய்த நபர்களை தேடி வந்த நிலையில் நேற்று சாய் ஸ்ரீ அவரது கணவர் கிருஷ்ணகுமார் மற்றும் அவரது மாமா பெருமாள்சாமி ஆகியோர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கோவை மாவட்டத்தில் மேலும் 9 நபர்களிடம் மொத்தம் ரூ.22, லட்சத்து 55 ஆயிரம் ஏமாற்றியது தெரியவந்தது. இது மட்டுமன்றி பிற மாவட்டங்களிலும் பலரை ஏமாற்றி ரூ 3கோடி வரைமோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து ரூ 1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதுபோன்ற அரசு துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறினால் பொதுமக்கள் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவுரை வழங்கினார்..