பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடியவர் கைது..!

கோவை கிணத்துக்கடவு பக்கமுள்ள சிங்கராம் பாளையம், பாரதியார் விதியைச் சேர்ந்தவர் மணி .இவரது மனைவி மங்கள சுந்தரி ( வயது 35) நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மதியம் 12 மணி அளவில் கதவின் பூட்டை உடைத்து இவரது வீட்டினுள் புகுந்த ஒரு ஆசாமி அங்கிருந்து டி.வி. மற்றும் பணம் ஆகியவற்றை திருடி கொண்டு வெளியே வந்தார். இதை பார்த்த பக்கத்து வீட்டில் வசிக்கும் சாந்தி சத்தம் போட்டார். இதனால் அந்த ஆசாமி டிவியை அங்கே வைத்து விட்டு பணத்துடன் தப்பி ஓடி விட்டான். பின்னர் மங்கள சுந்தரிக்கு போன் செய்து உங்கள் வீட்டில் இருந்து ஒருவர் திருடிக் கொண்டு வெளியே செல்வதாக கூறினார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் திருமலைச்சாமி வழக்கு பதிவு செய்து திருவண்ணாமலை மாவட்டம் , தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த குரு (வயது 38) என்பவரை நேற்று கைது செய்தனர். இவர் கிணத்துக்கடவு தாமரை குளத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். இவரிடம் இருந்து பணம் ரூ. 2 ஆயிரம் மீட்க்கப்பட்டது .மேலும் விசாரணை நடந்து வருகிறது.