இந்தியாவில் 2வது நபருக்கு பரவிய பறவைக் காய்ச்சல்… உறுதி செய்த உலக சுகாதார நிறுவனம்..!

னிதர்களுக்கு பரவும் அரிய வகையான பறவைக் காய்ச்சல் பாதிப்பு 4 வயது சிறுவனுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இந்தியாவில் இது இரண்டாவது நபருக்கான பாதிப்பு அறிகுறி. இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் ஒரு பண்ணையில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த பறவைகள் முற்றிலும் அழிக்கப்பட்டன. தற்போது மேற்கு வங்காளத்தில் எச்9என்2 என்ற வைரசால் ஏற்படக்கூடிய அரிய வகை பறவைக் காய்ச்சல் 4 வயது சிறுவனை பாதித்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வகை வைரஸ் இந்தியாவில் 2019 ல் முதல் முறையாக கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 2-வது பாதிப்பு பதிவாகியுள்ளது.இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பாதிக்கப்பட்ட குழந்தை கடந்த பிப்ரவரி மாதம் மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான காய்ச்சலால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான். பரிசோதனையில், எச்9என்2 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையின் உடல்நிலை சீரானதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். சிறுவனின் வீட்டுக்கு அருகில் உள்ள கோழிப் பண்ணையில் இருந்து இந்த வைரஸ் தாக்கியிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.சிறுவன் மற்றும் அவர் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தவர்கள் யாருக்கும் சுவாச நோயின் அறிகுறிகள் இல்லை. மேலும் இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது அல்ல என தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் அரிதான இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 2வது முறையாக பதிவாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. அரிய வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பை அடுத்து உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை இந்திய சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.