ரூ.11 கோடி இரிடியம் மோசடி வழக்கில் 3 பேர் கைது – ரூ. 20 லட்சம் பணம்,கார் பறிமுதல்..!

கோவை : கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் சிராஜுதீன் ( வயது 44) தொழில் அதிபர். இவரிடம் கோவை குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கான் (வயது 43 )என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இரிடியம் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக அவர் சிராஜுதீனிடம் ரூ 11 கோடி வாங்கினார். அதன்பிறகு அவர் இரிடியம் வாங்கி கொடுக்கவில்லை. இது குறித்து சிராஜுதீன் பலமுறை கேட்டும் பணத்தை திருப்பி கொடுக்காமல், இரிடியமும் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார் .இது குறித்து குனியமுத்தூர் போலீசில் சிராஜுதீன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீஸ் விசாரணையால் அதிர்ச்சி அடைந்த பெரோஸ் கான் தொழிலதிபர் சிராஜுதீனிடம் சமாதானம் பேச சென்றதாக கூறப்படுகிறது.. அப்போது அவர் முதல் கட்டமாக ரூ. 50 லட்சம் தருவதாகவும், மீதி தொகையை படிப்படியாக திருப்பி கொடுப்பதாகவும் கூறியுள்ளார் .மேலும் தன்மீது காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரை திரும்ப பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதை சிராஜுதீன் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து பெரோஸ்கான் நெல்லை,பழைய செட்டி குளத்தைச் சேர்ந்த ராஜ் நாராயணன் ( வயது 48 )தூத்துக்குடிமாவட்டம் ஆறுமுகநேரி,நடுத்தெருவை சேர்ந்தபொன் முருகானந்தம் என்ற பொன்னு குட்டி ( வயது 56) ஆகியோரை அணுகி உள்ளார். அவர்களிடம் ரூ.50 லட்சம் தருவதாகவும் தொழிலதிபர் சிராஜுதீனை மிரட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து ராஜ் நாராயணன், பொன் முருகானந்தம் ஆகியோர் ஒரு காரில் கோவையில் உள்ள பெரோஸ்கான் வீட்டிற்கு வந்து முதற்கட்டமாக ரூ 20 லட்சம் வாங்கினர். பின்னர் அவர்கள் காரில் சென்னை நோக்கி செல்ல முயன்றனர். இதுகுறித்து மாநகர போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில் உதவி கமிஷனர் அஜய் தங்கம் தலைமையில் போலீசார் குனியமுத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.. அப்போது பணத்துடன் சென்னைக்கு செல்ல முயன்ற ராஜ் நாராயணன், பொன் முருகானந்தம் மற்றும் கார் டிரைவரானநாங்குநேரி களக்காட்டைச் சேர்ந்த ஞான பாலாஜி (வயது 35) ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் பணம், கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலை மறைவாக உள்ள பெரோஸ்கானை போலீசார் தேடி வருகிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன் வருமானத்துறை அதிகாரிகள் பெரோஸ்கான் வீட்டில் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.