மனைவியுடன் தகராறு … மாமனார் வீட்டிற்கு தீ வைப்பு – மருமகன் கைது..!

கோவை வேடப்பட்டி அருகே உள்ள நம்பியழகன் பாளையத்தை சேர்ந்தவர் மதன்ராஜ் ( வயது 34 )டிரைவர். இவருக்கும் ஆர். எஸ். புரம் ,தடாகம் ரோடு, மீனாட்சி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராதாகிருஷ்ணன் ( வயது 60 )என்பவரின் மகளுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் .இந்த நிலையில் மதன் ராஜுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது .கடந்த 17ஆம் தேதி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது .இது குறித்து மதன்ராஜ் மீது அவரது மனைவி தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் .போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் மதன்ராஜுடன் தனக்கு வாழ விருப்பமில்லை என்றும், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர் போவதாகவும் அவரது மனைவி போலீசில் எழுதிக் கொடுத்திருந்தார். இதனால் மனைவியின் மீது ஆத்திரமடைந்த மதன்ராஜ் சம்பவத்தன்று தடாகம் ரோடு மீனாட்சி நகரில் உள்ள மாமனார் ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு சென்றார். பின்னர் ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி மாமனார் வீட்டிற்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் .இதனைக் கண்ட ராதாகிருஷ்ணன் உறவினர்கள் உதவியுடன் தீயை அணைத்தார். இதில் வீட்டின் முன்பகுதியில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தது .இந்த சம்பவம் குறித்து ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்கு பதிவு செய்து மதன்ராஜை கைது செய்தார்.