திருச்சி கல்லூரியில் மாணவி தற்கொலை.

சிவகங்கை மாவட்டம் அமமுக நகர செயலாளர் மகள் தாரிணி திருச்சி சமயபுரம் அருகில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிடெக் படித்து வந்த நிலையில் கல்லூரியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் மீது புகார் அளித்திருக்கிறார் மாணவியின் தந்தை பாலாஜி.
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியானது மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன் தந்தை சீனிவாசன் தாளாளராக உள்ளார். இவருக்கு பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகமும் உள்ளது. இக்கல்லூரியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவர் அந்த பகுதியில் அமமுக நகர செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மகள் தாரணி (19) முதலாம் ஆண்டு பி.டெக் பாட பிரிவைத் தேர்வு செய்து கல்லூரியில் சேர்ந்தார்.
கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தபடியே தினமும் கல்லூரிக்குச் சென்று பயின்று வந்த தாரணி திடீரென கல்லூரியின் விடுதியறையில் ஜன்னல் கம்பியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் தாரணியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் தந்தை பாலாஜி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் எனது மகள் B.தாரணி அவர்கள் சமயபுரம் தனலெட்சுமி இன்ஜினியரிங் கல்லூரியில் B.Tech. முதலாமாண்டு படித்து வத்தாள். மதியம் 12.30 மணியளவில் எனது மகள் தாரணி என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் மெண்டர் (mentor) இருவரும் சேர்ந்து தன்னைக் கடுமையாக திட்டுவதாகவும், என்னை வந்து உடனடியாக வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என்றும் கூறினாள்.
உடனடியாக சிவகங்கையில் இருந்து திருச்சி சமயபுரத்திற்கு நான் எனது மகளைப் பார்க்க மாலை 4.30. மணியளயில் கல்லூரிக்கு வந்தேன். நான் விடுதிக்கு சென்று, எனது மகளைச் சந்திக்க வேண்டும் என கூறினேன். மாலை 6.30 மணி வரை எனது மகளை சந்திக்க உள்ளே அனுமதிக்காமல் காத்திருக்க வைத்திருந்தனர். நான் ஏன் காலதாமதம் படுத்துகிறீர்கள் என கூறி உள்ளே செல்ல முயற்ச்சித்த போது தான், கல்லுாரி நிர்வாகத்தினர் என்னை ஐந்தாவது மாடிக்கு அழைத்து சென்று, அறை எண் 512ல் படுக்கையில் எனது மகள் பிணமாக கிடப்பதை காட்டினர்கள். மேலும் எனது மகள் ஜன்னல் கம்பியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்கள்.
எனது மகள் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை.எனது மகளின் இறப்பில் கல்லூரி நிர்வாகத்தின் மீது எனக்கு சந்தேகம் உள்ளது எனவே எனது மகள் தாரணி இறப்பு குறித்து உரிய விசாரனை மேற்கொண்டு இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பனிவுடன் வேண்டுகிறேன் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரி குறித்து அங்கிருந்தவர்களின் விசாரித்த போது இங்கு ஏற்கனவே 20 கல்லூரி மாணவிகளுக்கு மேல் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது? அதை வெளியே தெரியாமல் கல்லூரி நிர்வாகம் தனது பண பலத்தாலும் அதிகார பலத்தாலும் மறைத்து விடுகிறார்கள். மணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேருவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.