விளை நிலங்களில் பெட்ரோலியம் பைப் லைன் அமைக்கும் விவகாரம் – பாரத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் விளக்கம் !

விளைநிலங்களில் பைப் லைன் பதிக்கும் பணிகளால் விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை எனவும் நில விற்பனை மற்றும் வங்கிக் கடன் பெற பாரத் ஆட்சேபனையின்மை சான்று வழங்கப்படும் என பாரத் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் இருகூரிலிருந்து பெங்களூர் வரை எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணியை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதில் முத்தூர் வரை விளைநிலங்கள் வழியாக பைப் லைன் பதிப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், விளை நிலங்களில் எண்ணெய் பைப் லைன் பதிக்க எதிர்ப்பு தெரிவித்தும், இருகூர் முதல் முத்தூர் வரை எண்ணெய் பைப் லைனை சாலையோரம் அமைத்திட வலியுறுத்தியும் இருகூரில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெய் சேமிப்பு கிடங்கு வளாகத்தை கடந்த வாரம் வியாழனன்று முற்றுகையிட்ட விவசாயிகள்,பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மேலும் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முகாமிலும் இது குறித்து மனு அளித்தனர். முன்னதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த விவகாரத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மற்றும் வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நிறுவனத்தின் வாயிலில் அமர்ந்து கால வரையறையற்ற போராட்டத்தை முன்னெடுப்போம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் இருகூர் பாரத் பெட்ரோலியம் நிறுவன வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பு புதனன்று நடைபெற்றது. இதில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் எண்ணெய் குழாய் பதிப்பு திட்ட மேலாளர் ஜெலன்.கே.தம்பி,ஆர்த்திடா கிரியேஷன் அமைப்பின் நிர்வாகி நீனா ஆர்த்திடா,
திட்ட தலைமை அதிகாரி ராபின், ப்ராஜெக்ட் இன்ஜினியர் நித்திஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் பேசுகையில், 25 ஆண்டுகளுக்கு முன்பு கோவை இருகூரிலிருந்து முத்தூர் வரை 74 கிலோ மீட்டர்கள் எண்ணெய் பைப் லைன் விளைநிலங்கள் வழியாக பதித்து கொண்டு செல்லப்பட்டது. இதற்காக 18 மீட்டர்கள் அகலத்துக்கு இடம் பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அதே வழியாக இருகூரிலிருந்து முத்தூர் வரை மற்றொரு பைப் லைன் அமைக்கப்பட உள்ளது. நில உரிமையாளர்களுக்கு பழைய பைப் லைன் திட்டத்திற்காக ஏற்கனவே 10% இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில் தற்போது, மார்க்கெட் விலையில் 20% இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட உள்ளது. பைப் செல்லும் விளை நிலங்களில் உள்ள பயிர்களுக்கு 100% இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும். நிலத்தின் மீது கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், கடன் வழங்கும் நிறுவனத்துக்கு ஆட்சேபனையின்மைச் சான்று வழங்கிடவும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தயாராக இருக்கிறது. வங்கி உள்ளிட்ட இடங்களில் நிலத்தின் மீது கடன் வாங்குவதற்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் உதவ தயாராக உள்ளது. பைப் லைன் பதிக்கப்பட்ட நிலத்தினை விற்கவோ வாங்கவோ எந்த பிரச்சனையும் கிடையாது. இதுவரை செயல்பாட்டில் உள்ள பைப் லைன்களில் எந்த பிரச்சனையும் வந்ததில்லை. பொதுமக்களின் நலனையும் எதிர்கால தேவையையும் கருத்தில் கொண்டே பைப் லைன்கள் பதிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. பாரத் பெட்ரோலியம் நிறுவனம் உரிமையாளர்களிடமிருந்து நிலத்தை கையகப்படுத்துவதோ அல்லது விலைக்கு வாங்குவதோ இல்லை. நிலத்தை பயன்படுத்தும் உரிமையை மட்டுமே இழப்பீட்டு தொகை கொடுத்து பெற்றுக் கொள்கிறது
இதனை நில உரிமையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்..