திருச்சி காந்தி மார்க்கெட்டை பஞ்சப்பூருக்கு மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு..!

திருச்சி காந்தி மார்க்கெட்டை மாற்றுவது தொடர்பாக வியாபாரிகளின் கருத்து கேட்பு கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார் . மாநகராட்சி ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் பேசும்போது அனுபவம் வாய்ந்த வியாபாரிகள் அடங்கிய குழுவை அமைத்து காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் தற்போது காந்தி மார்க்கெட்டில் எவ்வளவு கடைகள் இருக்கிறது என்று தெரிய வரும் அதற்கு ஏற்றார் போல் புதிய மார்க்கெட்டில் எவ்வளவு கடைகள் அமைக்க வேண்டும் என்று தெரிய வரும். மேலும் இந்த கணக்கெடுப்பில் சுமார் 450 தரக்கடை வியாபாரிகளை கணக்கெடுக்கவில்லை .அவர்களுக்கும் கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும் .மேலும் காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரத்திற்காக தொடர்ந்து அங்கேயே செயல்பட வேண்டும் என்றார். மேலும் புறநகர் வளர்ச்சி நியாயமானது . ஆனால் நகரத்தின் முக்கியத்துவம் வாய்ந்த காந்தி மார்க்கெட்டை மாற்ற வேண்டாம் .காந்தி மார்க்கெட்டில் சீரமைத்து அங்கேயே வியாபாரம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினர். காந்தி மார்க்கெட் இடம் மாற்றம் செய்ய ஒரு தரப்பு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர் . இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு வியாபாரிகள் சங்கத்தினரும் வியாபாரிகளும் தங்களது கருத்துக்களை கூறி காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யக் கூடாது என்றனர். மேலும் புதிதாக அமைக்கப்படும் மார்க்கெட் ஒரே தலமாக இருக்க வேண்டும் . மேலும் கணக்கெடுப்பு தவறாக உள்ளது. அதனால் அதனை மறு ஆய்வு செய்ய வேண்டும் .மேலும் ஐந்து ஏக்கர் பரப்பளவில் மளிகை கடை அமைப்பதற்கு அவசியமில்லை அதனை காய்கறி கடைகளுக்கு ஒதுக்க வேண்டும் சில கடைகளுக்கு முன்பு தரைக்கடை அமைக்கப்பட்டுள்ளது அந்த வியாபாரிகளையும் சேர்த்து அனைவருக்கும் கடைகள் ஒதுக்க வேண்டும் 65 வெங்காயம் மண்டி மற்றும் 25 உருளைக்கிழங்கு மண்டியை கணக்கில் எடுக்கவில்லை. அதனை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் .திருச்சி தமிழகத்தின் முக்கியமான வெங்காய விற்பனை மையமாக உள்ளது .எனவே 65 கடைகளை வெங்காய கடைகளுக்கு மார்க்கெட்டில் ஒதுக்க வேண்டும் என்றனர். இறுதியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் பேசும்போது உங்கள் கருத்துக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் ஆய்வு செய்யப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்..