நடுரோட்டில் கோவை போலீஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல் – 2 பேர் கைது..!

கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் நேற்று அதே காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வரும் மணிமாறன், முதன் நிலை போலீஸ்காரர் பூபாலன் ஆகியோருடன் தடாகம் ரோடு கோவில் மேடு -நால் ரோடு சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார் . அப்போது அந்த வழியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறி இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார் . அப்போது அந்த 2 பேரும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தியை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதை கண்டித்த போலீஸ்காரர் பூபாலனை பிடித்து கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது கறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து தப்பி ஓடிய திண்டுக்கல் கூவக்கல்பட்டியைச் சேர்ந்த நாகராஜன் ( வயது 31) கரூர் காளப்பட்டி சேர்ந்த இளங்கோ (வயது35) ஆகியோரை கைது செய்தார். இவர்கள் மீது கொலை மிரட்டல் அரசு ஊழியரை பணி செய்யவிடாது தடுத்தல் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.