ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – மாஜி பாஜக நிர்வாகி கைது..!

திருப்பூர் மாவட்டம் அங்கேரி பாளையத்தை அடுத்த ஸ்ரீநகர் ,பிரதான வீதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 20ஆம் தேதி அந்த ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்த மர்ம ஆசாமி கல்லால் எ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்தார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது .இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் , ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து சேதப்படுத்தி பணத்தை திருட முயன்றது அங்கேரிபாளையத்தை அடுத்த அவிநாசி கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த முருகானந்தம் (வயது 54) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் முன்னாள் பா.ஜ.க. வடக்கு மாவட்ட பிரசார அணியின் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசார் முருகானந்தத்தை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.