கருணாநிதி ஆட்சியில் இருந்த போதும் சட்டம் ஒழுங்கு இப்படித்தான் இருந்தது – வானதி சீனிவாசன் பேட்டி.!!

மிழக பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது, கடலூரில் அதிமுக நிர்வாகி ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், கன்னியாகுமரியில் காங்கிரஸ் நிர்வாகி கொல்லப்பட்டது என அடுத்தடுத்து அரசியல் ரீதியிலான கொலைகள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன.

இதையடுத்து, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசனிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது: எப்போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீரழியும். இன்று நேற்று அல்ல.. திமுக ஆட்சியில் எப்போதும் இதுதான் நிலைமை. கருணாநிதி இருந்த போதும் சட்டம் ஒழுங்கு இப்படித்தான் இருந்தது. இப்போது ஸ்டாலின் முதல்வராக இருக்கும் போதும், சட்டம் ஒழுங்கு இப்படித்தான் இருக்கிறது.

திமுகவில் முதல்வர்கள் மாறினாலும், சட்டம் ஒழுங்கு சீரழிவு மாறவே மாறாது என்பதற்கு தற்போது நடக்கும் படுகொலைகள் தான் உதாரணம். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கொல்லப்படுகிறார்கள். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மாநிலத்தின் தலைநகர் என்பது பாதுகாப்பு மிகுந்தவையாக இருக்க வேண்டும். ஆனால், தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் படுகொலைகள் அரங்கேறுகின்றன. ஏதாவது கொலைகள் நடந்தால், உடனடியாக அதிகாரிகளை மாற்றுவதற்கு பெயர் நடவடிக்கையா? அது நடவடிக்கை அல்ல. அரசு எடுக்கும் நடவடிக்கை மக்களுக்கு பலனளிக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதிகாரிகளை மாற்றி கண்துடைப்பு வேலையைதான் இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது.

மேலும், என்கவுன்ட்டரை நடத்திவிட்டு, பார்த்தீர்களா போலீஸாருக்கு நாங்கள் எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். சுதந்திரம் என்பது என்கவுன்ட்டர் செய்வது அல்ல. மாறாக, அதிகாரத்திற்கு பயப்படாமல் குற்றச்செயல்களை தடுக்க போலீஸாருக்கு கொடுக்கப்படுவது தான் சுதந்திரம் என்பதை இந்த அரசு புரிந்துகொள்ள வேண்டும் என வானதி சீனிவாசன் கூறினார்.