தாக்குதல் நடத்த தயாராக இருக்கும் ஈரான்.. அமெரிக்கா, பிரிட்டன் உதவியை நாடும் இஸ்ரேல்.!!

டெல் அவிவ்: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் தயாராகி வருகிறது. இதனையடுத்து, நட்பு நாடான அமெரிக்கா, பிரிட்டனுடன் இணைந்து செயல்படுவோம் என இஸ்ரேல் கூறியுள்ளது.காசா நகர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உண்டாகி உள்ளது. இச்சூழலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியது. இக்கொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் தயாராகி வருகிறது. இது தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லாண்ட் கூறுகையில், அமெரிக்க அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் மற்றும் பிரிட்டன் அமைச்சர் ஜான் ஹூலே உடன் ஆலோசனை நடத்தினேன்.

அப்போது, பாதுகாப்பு சூழ்நிலை குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த இரு நாடுகளுடனும் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்த முறை தாக்குதல் கடுமையாக இருக்கும் என தெரிகிறது. அதேநேரத்தில் கடந்த வாரம் அமெரிக்க அமைச்சர் ஆஸ்டின் லாயிட் கூறுகையில், இஸ்ரேல் தாக்கப்பட்டால், நிச்சயம் அந்நாட்டிற்கு உதவுவோம். பிரிட்டனுடனும் ஆலோசனை நடத்தி உள்ளோம் என்றார்.