நியூராலிங்க் சிப்… இரண்டாவது நபருக்கு பொருத்திய எலான் மஸ்க்..!

நியூராலிங்க் நிறுவனம் தனது மூளை சிப்பினை வெற்றிகரமாக இரண்டாவது நபருக்கு பொருத்தி உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும், கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது.

இப்போது மனிதர்களுக்கு அதை பொருத்தி சோதனை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஜனவரியில் முதல் முறையாக சோதனை அடிப்படையில், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 29 வயதான நோலண்ட் என்ற நபருக்கு சிப் பொருத்தப்பட்டது. இதன்மூலம் தன்னால் கணினியை இயக்க முடிவதாக அவர் தெரிவித்தார். இந்த சிப்பை இம்பிளான்ட் செய்தது எப்படி மற்றும் இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை எப்படி நடந்தது என்பது குறித்து நோலண்ட் தற்போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இரண்டாவதாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு சிப் பொருத்தப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இரண்டாவது நபரின் மூளையில் இம்பிளான்ட் செய்யப்பட்ட 400 எலக்ட்ரோடுகள் செயல்பட்டு வருவதாக மஸ்க் தெரிவித்துள்ளார். அதோடு சிக்னல்கள் அதிகம் கிடைப்பதாகவும், இந்த இம்பிளான்ட் பணி சிறப்பாக நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த இரண்டாம் நபர் யார் என தெரிவிக்கவில்லை.

மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்களது கிளினிக்கல் ட்ரையலின் (மருத்துவ சோதனை) முயற்சியாக மேலும் எட்டு பேரின் மூளையில் சிப் பொருத்த முடியும் என எதிர்பார்ப்பதாக மஸ்க் தெரிவித்துள்ளார்..