கலைஞரின் 6 ம் ஆண்டு நினைவு தினம்… கோவையில் திமுக அமைதி ஊர்வலம்..!

முத்தமிழறிஞர் கலைஞரின் 6 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி தலைமையில், கோவை மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொஅ.ரவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த அமைதி பேரணி சித்தாப்புதூரில் இருந்து துவங்கி, விகேகே மேனன் சாலை வழியாக காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலை வரை வந்தடைந்தது. அங்கு அலங்கரிக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக அமைதி பேரணியில், கலைஞரின் திருவுருவம் பொரித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு திமுகவினர் கலந்து கொண்டனர்.

இந்த அமைதி பேரணியைத்தொடர்ந்து, அமைச்சர் முத்துச்சாமி பேசுகையில்;-

கலைஞரின் மறைவு என்பது இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்திய நாள். பல்வேறு கிராமங்களிலும் பஞ்சாயத்துகளிலும் கலைஞரின் நினைவு தினத்தை ஒட்டி பொதுமக்கள் அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். கலைஞர் மறைந்த போது சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகிலேயே கலைஞருக்கு நினைவிடம் அமைப்பதற்கு அரசின் சார்பில் அனுமதி கிடைக்கவில்லை, அன்றைய எதிர்க்கட்சி தலைவரும் கலைஞரின் குடும்பத்தார் அனைவரும் கேட்டும் கூட அதற்கான அனுமதி கிடைக்கப்பெறவில்லை. ஆனால் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்த உடன் 10 மணி நேரத்திற்குள் அந்த இடம் கலைஞருக்கு கொடுக்கப்பட வேண்டும் என உத்தரவு போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவிடம் அமைக்கப்பட்டது.

இன்றைய தினம் அவரது நினைவு தினம் மட்டுமல்லாமல் அவர் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று எண்ணினாரோ அனைத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடுக்கின்ற அனைத்து முடிவுகளுக்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் உறுதிமொழி எடுக்கின்ற காலமாக உள்ளது. பல்வேறு இடங்களில் கலைஞரின் சிலை இன்று திறக்கப்பட்டுள்ளது. கணியூரில் கலைஞரின் சிலை திறக்கும் பணிகள் ஆனது நடைபெற்று வரும் நிலையில் அனைத்து விதமான அனுமதிகளையும் உரிய முறையில் பெற்று அந்த சிலை நிறுவ பெற்றுள்ளது. ஒன்பதாம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் வருகை புரிந்து அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அதன் பிறகு அந்த சிலையை திறந்து வைக்க உள்ளார்.

கட்சிக்கு சொந்தமாக 16 சென்ட் நிலம் இருப்பதாகவும் அங்கு சிலையை நிறுவ வேண்டும் என்று மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் கூறியிருப்பதாகவும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஒன்பதாம் தேதி கோவை அரசு கலைக்கல்லூரியில் தவப்புதல்வன் நிகழ்ச்சியும் உக்கடம் பகுதியில் ஒரு பகுதி மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. கணியூரில் சிலை மட்டுமல்லாமல் அதற்கு அடியில் நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகர மேயர் ரங்கநாயகி, துணைமேயர் வெற்றிச்செல்வன், மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ், மாவட்ட பொருளாளர் எஸ்எம்.முருகன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.