உதகை ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி தேசிய தரவரிசை பட்டியலில் 4 வது இடத்தை தக்கவைத்து மீண்டும் சாதனை.!

ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகத்தால் நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு அதன் தரத்திற்கு ஏற்ப தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதில்2024 ஆம் ஆண்டிற்கான உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று (12.07.2024) புது டில்லியில் உள்ள பாரத் மண்டபம் அரங்கில் மத்திய கல்வி அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதில் வெளியிடப்பட்ட பார்மசி கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் உதகையில் உள்ள ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரி கடந்த ஆண்டு வகித்த 4 வது இடத்தை இந்த ஆண்டும் தக்கவைத்து நாட்டின் தலைசிறந்த ஐந்து பார்மசி கல்லூரிகளில் ஒன்றாக மீண்டும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது. மேலும் ஜெ.எஸ்.எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்விக் கழகத்தின் அங்கங்களான மைசூரில் உள்ள ஜெ எஸ்.எஸ் பார்மசி கல்லூரி 6வது இடத்தையும், ஜெ.எஸ்.எஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் ஜெ.எஸ். எஸ் பல் மருத்துவ கல்லூரி முறையே 12வது மற்றும் 39 வது இடத்தையும் பெற்றுள்ளன.
ஜெ.எஸ்.எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்விக் கழகம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) 24 வது இடத்தை பெற்று சிறந்த 50 பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் இருந்து முன்னேறி சிறந்த 25 பல்கலைக்கழ்கங்களின் தரவரிசையில் இடம்பிடித்திருக்கிறது.
ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மஹாஸ்வாமிஜி தலைமையில் ஜெ.எஸ். எஸ் மகாவித்யாபீடத்தின் நிர்வாக செயலாளர் டாக்டர் சி.ஜி பெட்சுர்மத், இணைவேந்தர் டாக்டர் பி. சுரேஷ், துணைவேந்தர் டாக்டர் சுரிந்தர் சிங், பதிவாளர் டாக்டர் பி.மஞ்சுநாதா ஆகியோரின் இடைவிடாத உழைப்பும், தொலைநோக்கு பார்வையும் ஜெ.எஸ். எஸ் கல்வி நிறுவனங்கள் இந்த இடங்களைப் பெற உதவியது என்றால் அது மிகையாகாது.
ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி, உதகை இந்தத் தரத்தை அடைவதில் கல்லூரியின் தற்போதைய மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்களின் பங்களிப்பும் மிக முக்கியமானது எனவும், கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் சமூக பணிகளில் ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி, உதகையின் புதுமையான பார்வையும், அயராத உழைப்பும் இந்த தரத்தை பெற உதவியது என்று கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.பி தனபால் அவர்கள் பெருமிதத்துடன் கூறினார்.
மீண்டும் உதகை ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரி மத்திய அரசின் தேசிய தரவரிசை பட்டியலில் நான்காவது இடத்தை தக்க வைத்து மீண்டும் சாதனை படைத்த நிர்வாகத்துக்கு கல்லூரியின் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் நீலகிரி பல பகுதிகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வண்ணமாக உள்ளது