ரயிலில் உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இன்று மற்றும் நாளை போலந்து நாட்டில் பயணம் மேற்கொள்கிறார். மோடி 3ஆம் முறை பிரதமராக பதவியேற்ற பின் முதல் பயணமாக கடந்த ஜூலை மாதம் ரஷ்யா சென்றார்.

இது அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகளின் விமர்சனத்தை சந்தித்தது. இந்நிலையில் பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

அங்கு அந்நாட்டு பிரதமர் டொனால்ட் டஸ்க் மற்றும் அதிபர் ஆண்ட்ரெஜ் டூடாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும்பிரதமர் மோடி, அதன் பின்னர் வர்சாவில் உள்ள இந்திய வம்சாவளி மக்களை சந்திக்கிறார். போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு 23ம் தேதி சொகுசு ரயில் மூலமாக உக்ரைனுக்கு செல்கிறார்.

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி உக்ரைனுக்கு செல்ல உள்ளார். கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டுக்கு வர பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் ரயில் மூலமாக சுமார் 20 மணி நேரம் பயணம் செய்து உக்ரைன் செல்ல உள்ளார் பிரதமர் மோடி.

உக்ரைனில் போருக்கு பின் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சாலைப்போக்குவரத்து ஆபத்தானதாக உள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்குள் செல்ல ரயில் பயணமே உகந்ததாக உள்ளது. இதற்கு முன் உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மன் தலைவர் ஓலஃப் ஷோல்ஸ் ஆகியோரும் போலந்திலிருந்து ரயில் வழியாகவே உக்ரைன் சென்றிருந்தனர். டிரெய்ன் ஃபோர்ஸ் ஒன் என்ற இந்த ரயில் சொகுசு வசதிகளுடன் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கொண்டதாகும்.

இந்த ரயிலின் சிறப்பம்சங்கள் என்னவென்றால், உட்புறம் மரத்தால் ஆன அறைகள் உள்ளது. முக்கியமான கூட்டங்களுக்கு ஒரு பெரிய மேசை, பட்டு சோபா மற்றும் ஒரு சுவரில் பொருத்தப்பட்ட டிவி ஆகியவை வசதிகளைக் இந்த இரயில் கொண்டுள்ளன. தூங்குவதற்கு ஏற்ற வசதிகளுடன் இந்த இரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.