அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி- போலி சப் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியுடன் கைது.!!

கோவை அருகில் உள்ள ஈச்சனாரி ,விநாயகர் கோவில் வீதி சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் தினேஷ் ( வயது 27) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வினு ( வயது 34 )என்பவர் வாடகைக்கு குடி வந்தார். அப்போது அவர் தன்னைப் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் என்றும், அமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வருவதாகவும், கூறியுள்ளார். அவருடன் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வீரபத்திரன் (வயது 24) என்பவரும் தங்கி இருந்தார். இந்த நிலையில் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருப்பதால் ரூ. 2 லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாக தினேஷ் மற்றும் அவரது உறவினரிடம் கூறினார். அதன்பிறகு 4 நாட்களாக வினுவும், வீரபத்திரனும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தினேஷ் மற்றொரு சாவி மூலம் வீட்டை திறந்து பார்த்தார். அப்போது அந்த அறையில் ஏர் கன் ரக துப்பாக்கி மற்றும் போலீசார் பயன்படுத்தும் லத்தி , போலீஸ் அடையாள அட்டை, சீருடை ஆகிய வை இருந்துள்ளது. ஆனாலும் வினு மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் மதுக்கரை போலீசார் விசாரணைநடத்தினர்.இதில் வினு சப் இன்ஸ்பெக்டர்என்று கூறி மோசடியில் ஈடுபட்டதாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது .இதையடுத்து வினு வீட்டில் இருந்த ” ஏர் கன் “ரகத் துப்பாக்கி மற்றும் போலி அடையாள அட்டைகள்,சீருடைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் . தலைமறைவான வினு , வீரபத்திரன் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மதுக்கரை பகுதியில் வைத்து போலீ சப்- இன்ஸ்பெக்டர் வினுவை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வீரபத்திரனை தேடி வருகிறார்கள்.