சூலூரில் திருட சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி திருடன் சாவு..!

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள அப்பநாயக்கன்பட்டி, செலக்கரிச்சல் ரோட்டில் செயல்படாத இரும்பு தொழிற்சாலை உள்ளது . இந்த தொழிற்சாலையில் உள்ள இரும்புகளை திருடுவதற்கு நேற்று முன்தினம் சேலம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 27) சரவணன், முத்து ஆகிய 3 பேர் சென்றனர் . அப்போது முத்து மற்றும் சரவணன் ஆகியோர் தொழிற்சாலையின் சுற்றுச் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளார். கார்த்திக் சுற்றுச் சுவரின் மீது ஏறி நின்றுள்ளார் . முத்து, சரவணன் ஆகியோர் தொழிற்சாலையில் இருந்து திருடி கொடுக்கும் இரும்பு கம்பியை சுற்றுச் சுவர் மேல் நின்று கார்த்திக் வாங்கி தொழிற்சாலைக்கு வெளியே வீசி உள்ளார். இப்படி இரும்பு கம்பிகளை வாங்கி வெளியே வீசியபோது சுற்றுச் சுவருக்கு மேலே சென்ற மின் கம்பியின் மீது இரும்பு கம்பி உரசி உள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி கார்த்திக் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் இறந்தார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் கார்த்திக், முத்து, சரவணன் ஆகியோர் இரும்பு தொழிற்சாலைக்கு திருடச் சென்றதும் அப்போதும் மின்சாரம் தாக்கி கார்த்திக் இறந்ததும் தெரிய வந்தது .இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருட சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி திருடன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..