வீட்டின் முன் விடிய, விடிய படுத்திருந்த சிறுத்தை – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விவசாயி.!!

கோவை தொண்டாமுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையோரம் அட்டுக்கல் மலைவாழ் கிராமம் உள்ளது. அங்குள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் வசிப்பவர் ராஜன். இவர் மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் இவரது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் வெளியே வந்து பார்த்தபோது ராஜனின் வீட்டு முன்பாக சிறுத்தை ஒன்று படுத்து இருந்ததை கண்ட அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளிடம் வீட்டு வாசலில் சிறுத்தை படுத்திருப்பதாக கூறியதோடு யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார். விடியும் வரை ராஜன் குடும்பத்தினரோடு அச்சத்துடன் வீட்டுக்குள்ளேயே விழித்திருந்தனர். விடிந்த பிறகு வெளியே வந்து எட்டிப் பார்த்தபோது சிறுத்தை இல்லாததை உறுதி செய்த பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் நேரடியாக வீட்டுக்கு வந்து சிறுத்தையின் காலடி தடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பொதுமக்களிடைய கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.