கஞ்சா, போதை ஊசிகள், பட்டாக்கத்திகளுடன் கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் கைது – கோவை போலீசார் அதிரடி .!!

கோவை மாவட்டத்தில் கஞ்சா உட்பட போதை பொருட்கள் விற்பனையை அறவே இல்லாத ஒழிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள டாக்டர் கார்த்திகேயன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதன் பேரில் நேற்று முன்தினம் 250க்கு மேற்பட்ட போலீசார் 5 குழுக்களாக பிரிந்து கோவை புறநகர் பகுதிகளில் மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள் ,தங்கும் அறைகள் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 3 கிலோ கஞ்சா 4 பட்டாகத்திகள்,போதை ஊசிகள், நம்பர் பிளேட் இல்லாத 42 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேகத்துக்குரிய 38 பேரை போலீசார் பிடித்து வருகிறார்கள். இந்த சோதனையில் கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பர்ண்டு தங்கராமன், சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன், கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகவேலு மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள், உள்ளூர் போலீசார், ஆயுதப்படை போலீசார் ஈடுபட்டனர்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- படிக்கும் காலத்தில் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். போதைப்பொருட்கள் பயன்படுத்துதல், குற்றப் பின்னணி உள்ளவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துதல், குழு அமைத்து ரவுடிசத்தில் ஈடுபடுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது . அதை மீறி சட்டவிராத செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கும் போது அவர்களின் முழு விவரங்களை உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். சந்தேக நபர்கள் வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் அதிக கூடும் இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரபடுத்தப்படும். இவ்வாறு  அவர் கூறினார்..