போலி என்சிசி முகாம்… மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : மேலும் ஒரு பள்ளி முதல்வர் கைது..!

கிருஷ்ணகிரி : பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். இந்த புகாரில் முக்கிய குற்றவாளியாக போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் உட்பட பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர், பயிற்சியாளர் உட்பட 11 பேர் கைதாகினர். இதே போன்று சிவராமன் வேறு எங்கெல்லாம் போலியாக என்சிசி முகாம் நடத்தினார் என போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கிருஷ்ணகிரியில் மேலும் ஒரு பள்ளியில் இந்த வருட தொடக்கத்தில் ஜனவரி போலியாக என்சிசி முகாம் நடைபெற்றதும், அங்கு 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது.

மேற்கண்ட வழக்கிலும் முதல் குற்றவாளியாக சிவராமன் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த வழக்கில் சிவராமனை தவிர ஒருவர் கைதாகி இருந்த நிலையில், தற்போது பள்ளி பெண் முதல்வர் வினோதினியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இரு வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக உள்ள சிவராமன் காவல்துறையினர் கைது செய்வதற்கு முன் விஷம் அருந்தி இருந்தார், பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகளில் நேர்ந்த இந்த பாலியல் குற்றசாட்டுகளை முழுதாக விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு புலனாய்வு குழு மற்றும் பல்நோக்கு விசாரணை குழு ஆகிவற்றை அமைத்துள்ளார்.