திருச்சியில் புதைகால் வழி அடைப்பை எடுக்கப் புதிய கருவி..!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டுகள் உள்ளடக்கி (Under Ground Drainage) புதை வடிகால் சாக்கடை இணைப்புகள் கொண்ட மாநகராட்சி ஆகும். இதில் புதைவடிகால் மேன்ஹோல் சாக்கடையில் அவ்வப்போது அடைப்புகள் ஏற்படுகின்றன. இதனை மனித ஆற்றல் கொண்டு எடுக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு மாற்று வழியாக கழிவு நீர் பாதைகளில் அடைப்புகளை அகற்றுவதற்காக சில்ட் அகற்றும் சூப்பர் சக்சர் வாகனங்கள் மூலம் எடுக்கப்பட்டது. ஆனால் சிறிய தெருக்களில் இந்த வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தானியங்கி ரோபாட்டிக்ஸ் இயந்திரங்களை பயன்படுத்தி அடைப்புகளை சரிசெய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 60 ஆவது வார்டு, காஜாமலை பகுதியில், புதைவடிகால் தொட்டிகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சோதனை முறையில் அகற்றும் பணிகள் நடைபெற்றது. அவற்றை மாநகராட்சி மேயா் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது; மாநகராட்சியில் புதைவடிகால் தொட்டிகளுக்குள் ஏற்படும் அடைப்புகளை நீக்குதல், சாக்கடை அடைப்புகளை நீக்கும் பணிகளுக்கு துப்புரவு தொழிலாளா்களை பயன்படுத்தப் போவதில்லை. இதுபோன்ற இயந்திரங்களைக் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். இந்த ஆய்வில் மண்டலத் தலைவர் துர்கா தேவி, மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய் , உதவி ஆணையர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்..