மாடு குறுக்கே ஓடியதால் பைக்கில் இருந்து விழுந்து ரேஷன் கடை ஊழியர் பரிதாப பலி.

கோவை மாவட்டம் அன்னூர் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 41) அவிநாசி அருகே கைகாட்டி புதூரில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன் தினம் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் அன்னூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். தாசம் பாளையம்பிரிவு அருகே சென்றபோது திடீரென்று ஒரு மாடு  ரோட்டில் குறுக்கே பாய்ந்தது. இதில் பைக் ஓட்டிச் சென்ற குணசேகரன் நிலைத்தடுமாறி  கீழே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..