கோவை லாட்ஜில் காதலி அடித்துக் கொலை – காதலன் கைது..!

கோவை அருகே உள்ள சின்னியம்பாளையத்தில் பஸ் ஸ்டாப் அருக தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி ( லாட்ஜ்) உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலையில் ஒரு இளம் பெண்ணும் வாலிபரும் அறை எடுத்து தங்கினர். பின்னர் நேற்று அதிகாலையில் வாலிபர் மட்டும் வேகமாக விடுதியை விட்டு வெளியேறுவதை கண்ட விடுதி ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனால் அந்த அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு தங்கியிருந்த இளம்பெண் முகத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பீளமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்தப் பெண்ணின் உடல் மீட்கப்பட்டு சிங்காநல்லூர் இ எஸ் ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .இந்த நிலையில் அந்த பகுதியில் சுற்றித் திரிந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழரசு தலைமையிலான தனிப்படையினர் விசாரித்தனர். விசாரணையில் அவர் சின்னியம்பாளையம் ஆர்.ஜி. புதூர் , ஸ்டாலின் வீதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் சரவணன் ( வயது 29) என்பது தெரிய வந்தது. இறந்து கிடந்த பெண் எஸ். எஸ். குளம் அருகே உள்ள கள்ளிபாளையம்,அண்ணா நகரைச் சேர்ந்த அம்மாசை மகள் கீதா (வயது 26) என்பதும் கோவை அவிநாசி ரோட்டில் ஒரு மகளீர் விடுதியில் தங்கியிருந்து ஜிம்மில் பயிற்சியாளராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. கீதாவும், சரவணனும் காதலித்து உள்ளனர். வீட்டுக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணத்தை பதிவு செய்யவில்லை . சரவணனும் ,கீதாவும் அண்ணன் -தங்கை உறவு முறை என்று தெரிகிறது .இதனால் அவர்களது திருமணத்தை குடும்பத்தில் ஏற்கவில்லை. இருந்தாலும் சரவணனும்  ,கீதாவும், யாருக்கும் தெரியாமல் அடிக்கடி அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். இதே போல அறை எடுத்து விடுதியில் தங்கிய போது சரவணனுக்கும், கீதாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கீதாவின் நடத்தையிலும் சரவணன் சந்தேகம் அடைந்துள்ளார். நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து சரவணன் கீதாவின் முகத்தில் கையால் குத்தி, தலையை சுவற்றில் மோத செய்ததாக தெரிகிறது இதில் கீதா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து காதலன் சரவணன் இன்று கைது செய்யப்பட்டார். கோவையில் தங்கும் விடுதியில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..