யார் துணை முதல்வர்… யாருக்கு அதிகாரம் என்பது ஆளும்கட்சி முடிவு செய்யும் – தொல். திருமாவளவன் பேட்டி..!

கோவை சென்னையில் இருந்து திருப்பூர் செல்ல, விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை செய்தியாளர்கள் சந்தித்தினர்.

சென்னை திமுக கட்சி அலுவலகமான அறிவாலயத்தில் துணை முதல்வருக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்து வருவதாக வந்த தகவல் தொடர்பான கேள்விக்கு, யாரைத் துணை முதல்வர் ஆக்குவது, யாரை அதிகாரத்தில் அமர வைப்பது என்பது ஆளுங்கட்சி எடுக்கின்ற முடிவு என்றும் முடிவெடுத்த பிறகு தான் கருத்து சொல்ல முடியும் என்றும் கூறினார்.

மேலும் பேசியவர் தேசிய கல்வி கொள்கை வேறு, தேசிய மது விலக்கு கொள்கை வேறு, தேசிய கல்வி கொள்கையில் தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற சில மாநிலங்களும் கருத்து முரண்பாடு கொண்டுள்ளதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை தேசிய கல்விக் கொள்கையை அப்படியே ஏற்று நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக கருதுவதாகும் அதனால் அதை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

தேசிய மதுவிலக்கு கொள்கை என்பது தேசிய அளவிலான மனித வளத்தை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றும் இந்தியாவில் குஜராத் பீகார், நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தவிர எல்லா மாநிலங்களில் அரசு மதுபான வியாபாரத்தை செய்வதால் தேசத்திற்கான மனித வளம் பாழாகிறது என்றும் கூறிய அவர், அதனால் அரசியல் அமைப்பு சட்டம் உறுப்பு எண் 47ன் படி தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கையை வரையறுக்க வேண்டும் என்றும் அதற்கான தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்துவதாகவும் கூறினார்.

தமிழ்நாடு அரசு மதுபான கடைகளை மூட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமான கோரிக்கையோ, அதேபோல் இந்தியா முழுவதும் மது கடைகளை மூட வேண்டும் என்றும் இந்தியா முழுவதும் மதுக்கடைகளை மூடுவதற்கு தேசிய மதுவிலக்கு கொள்கை வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் கூறினார்.

எச்.ராஜா கருத்துக்கு, முதல்வரை சந்திப்பதற்கு முன்பு என்ன கோரிக்கைகளை பேசினோமோ அதே கோரிக்கைகளை தான் முதல்வரை சந்தித்த பிறகும் பேசிக் கொண்டிருப்பதாக கூறினார். தங்கள் நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தங்கள் கருத்தில் திமுக உடன்படுவதால் தாங்கள் மாநாட்டில் பங்கேற்க இசைவு அளித்திருப்பதாகவும் கூறினார்.

திமுகவை உட்கார வைத்து எப்படி மது ஒழிப்பை பேசுவீர்கள் என்பது தொடர்பான கேள்விக்கு, நாங்கள் பேசுகிறோமோ? இல்லையா? என்பதை மாநாட்டின் போது பாருங்கள். என்றார்.

அன்னபூர்ணா உரிமையாளர் பேசிய கருத்து மிகவும் சரியானது என்றும் அதை வரவேற்பதாகவும் கூறிய திருமாவளவன், அவரை அழைத்து கொண்டு போய் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டது வேதனை அளிப்பதாகவும் அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்றும் கூறினார், தொடர்ந்து அடுத்த அடுத்த நிகழ்ச்சிகள் உள்ளன கூறி வாகனத்தில் ஏறி சென்றார்