ரவுடிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ஆல்வின் மீது கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன .கடந்த வருடம் நடைபெற்ற கொலைக்கு ஆல்வினை பழிவாங்கும் நோக்கத்தில் எதிர் தரப்பினர் திட்டமிட்டு செயல்பட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்த தகவலை சேகரித்து பழிக்கு பழி என்ற கொலையை தடுப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆல்வின் கைது செய்யப்பட்டதன் மூலம் பழிக்கு பழி வாங்கும் கொலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கோவையில் 600க்கும் மேற்பட்டவர்கள் குற்றப் பின்னணியில் உள்ளவர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. போலீசார் அவர்களை கண்காணித்து வருகின்றனர். ரவுடிகள் எந்த மாவட்டமாக இருந்தாலும் சரி, எந்த மாநிலமாக இருந்தாலும் சரி அவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும். கோவையில் ரவுடிகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளையும் ரவுடிகளையும் பின் தொடரும்போது காவலர்கள் துப்பாக்கி எடுத்து செல்வது காவல் பணியில் ஒரு பகுதி தான். பெரிய குற்றங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக சட்டத்தை பாதுகாக்க துப்பாக்கி பயன்படுத்துவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. பயங்கரமான ரவுடிகளை பின்தொடர்ந்து போகும் போது காவலர்களின் பாதுகாப்புக்காக கையில் துப்பாக்கி வைத்துக் கொள்வது நடைமுறை தான். சட்டபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்க காவல்துறை தயங்காது.இவ்வாறு கூறினார்.