திருச்சி உணவகத்தில் சத்துணவு முட்டை ஹோட்டலுக்கு சீல் வைப்பு..!

சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து, திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு தலைமையிலான உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், நேற்று முன்தினம் அந்த உணவகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு 5 சத்துணவு முட்டைகள் இருப்பதைக் கண்டனர்.
உணவகத்தை நடத்தி வரும் ஜன்னத்துல் குப்ராவிடம்(60) விசாரித்தபோது, அவரது அக்கா சல்மா(67), பக்கத்து தெருவில் வசிக்கும் சத்துணவு அமைப்பாளரான சத்யா(44) என்பவரிடம் இருந்து 30 முட்டைகள் ரூ.110 வீதம் 60 முட்டைகள் வாங்கிக் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.
உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், சத்யா வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது, முட்டை வியாபாரியான அவரது கணவர் ரகுராமன்(43), அந்தநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முட்டைகளை விநியோகம் செய்வதும், அதில் சில முட்டைகளை உணவகத்துக்கு விற்றதும் தெரிய வந்தது. உணவகத்தில் இருந்து 5 முட்டைகள், சத்யா வீட்டில் இருந்து 900 முட்டைகளைப் பறிமுதல் செய்து உணவகத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் சத்யா, ரகுராமன், உணவக உரிமையாளர் ஜன்னத்துல் குப்ரா, அவரது அக்கா சல்மா ஆகிய 4 பேரையும் எடமலைப்பட்டிபுதூர் போலீஸில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக எடமலைப்பட்டிபுதூர் குற்றப் பிரிவு போலீஸ்இன்ஸ்பெக்டர் பேபி உமா வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார். சத்துணவு முட்டையை ஹோட்டலுக்கு கொடுத்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..