சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு..!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக்கொண்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர்.மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து , சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி காலியானது. அதன்பின்னர் அந்த பதவிக்கு மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் அவர்களை கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. தொடர்ந்து கடந்த 21ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்து உத்தவிட்டார்.

இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் அமைந்துள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, ரகுபதி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.