கணவன் அடித்துக் கொலை – மனைவி கைது..!

கோவை கிணத்துக் கடவு பக்கம் உள்ள எஸ். மேட்டுப்பாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் நந்தகுமார் ( வயது 33) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சஹானா பேகம் ( வயது 27) மதுக்கரையைச் சேர்ந்த இவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நந்தகுமார் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தன்வந்த் (வயது 4) என்ற மகன் உள்ளான் .நந்தகுமார் இடிகரை ராமானுஜம் நகரில் குடியிருந்து கொண்டு மணியக்காரன் பாளையத்தில் உள்ள ஒரு கோழிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி கணவன் – மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சஹானா பேகம் வீட்டில் இருந்த பூரிக்கட்டையால் கணவர் நந்தகுமாரை சரமாரியாக அடித்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த நந்தகுமார் தன் மகனை அழைத்துக் கொண்டு கோழிக்கடைக்கு சென்று அங்கேயே படுத்து தூங்கிவிட்டார்..காலையில் கோழிக்கடை உரிமையாளர் பிரகாஷ் வந்து நந்தகுமாரை எழுப்பி உள்ளார். அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்தவர் மருத்துவரை வரவழைத்து பரிசோதித்துப் பார்த்தார் .அதில் நந்தகுமார் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. இது குறித்துபெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன்,சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று நந்தகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து அவரது மனைவி சகானா பேகத்தை போலீசார் கைது செய்தனர்..