பீர் பாட்டிலால் குத்தி வாலிபர் படுகொலை – இருவர் கைது..!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வளமீட்பு பூங்கா பகுதியில் நேற்று தலையில் ரத்தக்காயத்துடன் ஒருவர் பிணமாக கிடப்பதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது தலையில் கற்கள் மற்றும் மது பாட்டிலால் தாக்கியதில் அந்த வாலிபர் இறந்தது தெரிய வந்தது .இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் கோவை சித்தாபுதூர் வெங்கடசாமி ரோட்டை சேர்ந்த லோகநாதன் மகன் கண்ணன் (வயது 25) என்பது தெரிய வந்தது .இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார் .இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கண்ணன் சித்தாபுதூரை சேர்ந்த தனது நண்பர்களான கார்த்தி (வயது 22) ரவீந்திரன் (வயது 27) சதீஷ் ( வயது28) உட்பட 5 பேருடன் சித்தாபுதூரில் உள்ள ஒரு பாரில் மது அருந்தியுள்ளார். பின்னர் நண்பர்களுடன் வாடகை காரில் பெரியநாயக்கன்பாளையம் வள மீட்பு பூங்கா பகுதி அருகே வந்துள்ளனர் . அங்கு வைத்து அவர்கள் மீண்டும் மது அருந்திதாக தெரிகிறது . போதை தலைக்கு ஏறியதும் கண்ணன் மற்றும் நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் கண்ணனை கருங்கல் மற்றும் பீர்பாட்டிலால் தலையில் தாக்கி உள்ளனர். மேலும் பீர் பாட்டிலால் வயிற்றிலும் குத்தி உள்ளனர் . இதில் கண்ணன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தார். இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த கொலை தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் டி .எஸ் . பி . நமச்சிவாயம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் வழக்கு பதிவு செய்து கண்ணனின் நண்பர்களான கார்த்தி ரவீந்திரன் சதீஷ் உட்பட 5 வரை தேடி வருகிறார்கள். இதில் 2 பேர் சிக்கி உள்ளனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்..