நெமிலி அருகே கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்..!

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே கீழாந்துரை கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி வளாகத்தில் “கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்” சனிக்கிழமை நடைபெற்றது. முகாமில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முகாமினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, திட்டப் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மேலும் இத்திட்டத்தினை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு, சிறப்பான முறையில் செயல்படுத்தி வருவது குறித்தும், பொதுமக்கள் இம்முகாமில் எவ்வாறு பயன்பெற முடியும் என்பது குறித்தும் விளக்கிப் பேசினார். பின்னர் முகாமில், மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டு திட்ட விளக்கவுரை ஆற்றினர். இம்முகாமில், பொது மருத்துவம், இருதய சிகிச்சை பிரிவு, மகப்பேரு மருத்துவம், கர்பப்பை, வாய் புற்றுநோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், எலும்பு முறிவு, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, பல் மற்றும் கண் மருத்துவம், கோவிட்-19, சித்த மருத்துவம், தொழுநோய், காசநோய், குழந்தைகள் நலம் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் மருத்துவ பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. இம்முகாமில், ஊராட்சி மன்றத் தலைவர் மின்னல்ஒளி அம்பேத்ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கரி செல்லப்பன், ஊராட்சி மன்றத் துணை தலைவர் பாபு, கலைஞர்தாசன், சுகாதார ஆய்வாளர்கள் பெருமாள், பூஞ்செழியன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், சுகாதர செவிலியர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள், கிராம பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்..